கோலாலம்பூர், மே 29- நாட்டில் மீன் விநியோகம் போதுமான அளவு உள்ளது. எனினும், உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக வெளி வந்த தகவலைத் தொடர்ந்து பதற்றத்தில் பொது மக்கள் அதிக அளவில் உணவுப் பொருள்களை வாங்கிக் குவித்த காரணத்தால் சந்தையில் அந்த உணவுப் பொருளின் கையிருப்பு குறைந்து காணப்படுகிறது.
மீன் விநியோகப் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் என்பது தற்போதைய உலகலாவிய பிரச்னையாக விளங்குகிறது என்று மீன் வளத் துறையின் தலைமை இயக்குநர் முகமது சுப்பியான் சுலைமான் கூறினார்.
எனினும், அந்த உணவுப் பொருளின் விநியோகம் போதுமான அளவு இருப்பதை தமது இலாகா தொடர்ந்த உறுதி செய்து வருவதாக அவர் சொன்னார்.
மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்புத் துறையைப் பொறுத்தமட்டில் உற்பத்தி போதுமான அளவு உள்ளதால் பொது மக்கள் அந்த கடல் உணவுப் பொருளை அதிகளவில் வாங்க வேண்டாம். வழக்கமான அளவு வாங்கினால் போதுமானது என அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு சிலாங்கூர் மாநில நிலையிலான “வாருங்கள் நன்னீர் மீன்களை உட்கொள்வோம்“ எனும் இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நன்னீர் மீன் உற்பத்தியை பெருக்குவதற்கு ஏதுவாக பொது மக்கள் சமையலில் நன்னீர் மீன்களை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த இயக்கத்தை மீன் வளத்துறை மேற்கொண்டு வருகிறது.