ஷா ஆலம், ஜூன் 2 – கை, கால் மற்றும் வாய்ப் புண் நோய் காரணமாக சிலாங்கூரில் சுமார் 216 வளாகங்கள் மூடப்பட்டுள்ளதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி தெரிவித்தார்.
1998 ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 691 வளாகங்கள் 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
சுயமாக மூடுவதற்கு நாடு முழுவதும் 146 வளாகங்கள் முன்வந்துள்ளன. அவற்றில் 21 வளாகங்கள் சிலாங்கூரில் உள்ளன என்று டாக்டர் நூர் ஆஸ்மி சொன்னார்.
நேற்று இங்குள்ள ராஜா துன் உடா நூலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பொது மக்களின் கருத்தறியும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிலாங்கூரில் இதுவரை 20,433 கை, கால், வாய்ப்புண் நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெட்டாலிங்கில் அதிகபட்சமாக 7,247 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார் அவர்.
சிலாங்கூரில் 182 இந்நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இதில் 773 மையங்கள் அதாவது 83 விழுக்காடு மழலையர் பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்களை உள்ளடக்கியுள்ளன என்றார்.