ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கைப்பேசி மூலம் புகைப்படம் எடுக்கும் போட்டி- 9 வெற்றியாளர்களுக்கு வெ.30,000 பரிசு காத்திருக்கிறது

கோலாலம்பூர், ஜூன் 16- மாநில அரசு மற்றும் சிலாங்கூர், கோலாலம்பூர் சீன வர்த்தக மற்றும் தொழிலியல் மன்றத்தின் ஏற்பாட்டில் கைபேசி மூலம் புகைப்படம் எடுக்கும் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் ஒன்பது போட்டியாளர்களுக்கு முப்பதாயிரம் வெள்ளி மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன.

இன்று தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசும் வெளிநாட்டுச் சுற்றுலா வாய்ப்பும் வழங்கப்படும் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.

இப்போட்டியில் பங்கேற்பது எளிதானது. சிலாங்கூரிலுள்ள கவர்ச்சிகரமான இடங்களை கைப்பேசி மூலம் படம் பிடித்து அதனை தங்கள் பேஸ்புக்கில் என்ற #klscciphoto வார்த்தையுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த படங்கள் பொதுவான பார்வைக்கு வைக்கப்படுவது அவசியம் என்று அவர் சொன்னார்.

ஒருவர் பத்து படங்கள் வரை பதிவேற்றம் செய்யலாம் எனக் கூறிய அவர், நடுவர்கள் மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பேஸ்புக் மூலம் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள விஸ்மா சைனிஸ் சேம்பரில் இந்த போட்டியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இப்போட்டியில் பங்கேற்போர் விவேகப் கைபேசி மூலம் படம் எடுக்க வேண்டும். எந்த தணிக்கையும் இன்றி அசல் படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்போட்டி தொடர்பான மேல் விபரங்களை சீன வர்த்தக மன்றத்தின் பேஸ்புக் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.


Pengarang :