கோலாலம்பூர், ஜூன் 17– வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் (maut-sentosa.jpg) 425.8வது கிலோமீட்டரில் புக்கிட் பெருந்தோங் அருகே இன்று அதிகாலை டிரெய்லர் லாரியுடன் சுற்றுலாப் பேருந்து மோதிய விபத்தில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார்.
அந்த நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அதிகாலை 4.54 மணியளவில் தாங்கள் தகவல் பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் நோரஸாம் காமிஸ் கூறினார்.
புக்கிட் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து புறப்பட்ட தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 4.54 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்தனர் என்று அவர் சொன்னார்.
இந்த விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறிய நோராஸாம், முன்னால் சென்று கொண்டிருந்த 20 டன் டிரெய்லர் லோரியின் பின்புறத்தில் பேருந்து மோதியதாகச் சொன்னார்.
பலத்த மோதல் காரணமாக பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின்னர் அதிகாலை 5.13 மணிக்கு அவரை மீட்டனர். அந்தப் பெண்மணியை சோதித்த சுகாதார அதிகாரிகள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர் என்று அவர் இன்று பெர்னாமாவா தொடர்பு கொண்டபோது கூறினார்.
இச்சம்பவத்தின் போது ஹமைசா ஃபட்ஸிலா (வயது 54) என்ற அந்த பெண்மணி உள்பட 40 பயணிகள் அந்த பேருந்தில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
எனினும், இந்த விபத்தில் பஸ் மற்றும் டிரெய்லர் ஓட்டுநர்கள் மற்றும் இதர பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.