பாகான் செராய், ஜூன் 18- சிறப்பு கோரிக்கைகள் எழும் பட்சத்தில் பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் நடத்தும் என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.
அந்த தடுப்பூசித் திட்டம் கடந்த மே 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கிராமப்புறங்களில் வசிப்பர்கள் இலவச தடுப்பூசியைப் பெறுவதற்கு ஏதுவாக இத்திட்டத்தை மறுபடியும் அமல்படுத்துவதற்குரிய சாத்தியம் உள்ளது என்று அவர் சொன்னார்.
சிறப்பு கோரிக்கைகள் எழும் பட்சத்தில் சபாவில் தேசிய தடுப்பூசி வாரத்தையொட்டி அந்த தடுப்பூசி இயக்கத்தை நடத்துவோம். இத்திட்டத்தில் ஐந்து வயதுக்கும் குறைவானவர்கள் மற்றும் கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஐந்து முதல் பன்னிரண்டு வயது வரையிலான சிறார்களுக்கான பிக்கிட்ஸ் தடுப்பூசித் திட்டம் மே மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
தடுப்பூசி பெற ஆர்வமுள்ளவர்கள் மைசெஜாத்ரா செயலியில் பதிவு செய்து தடுப்பூசி பெறுவதற்கான தேதியைப் பெறலாம் என்று நோர் கசாலி சொன்னார்.
இணைய வசதி இல்லாத மற்றும் தடுப்பூசி பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கக்கூடிய சபா போன்ற புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நாங்கள் இத்திட்டத்தில் முன்னுரிமை அளிப்போம் என்றார் அவர்.