ECONOMYMEDIA STATEMENT

பத்தாவது மாடியிலிருந்து விழுந்து மூன்று வயது குழந்தை பரிதாப மரணம்

கோலாலம்பூர், ஜூன் 23 – இங்குள்ள ஜாலான் டூத்தாமாஸ்  ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து தவறி விழுந்து மூன்று வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் அக்குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 3.30 மணியளவில் போலீசாருக்கு அவசர அழைப்பு வந்ததாக செந்துல் மாவட்ட காவல்துறை தலைவர் ஐ.சி.பி. பே எங் லாய் தெரிவித்தார்.

அக்குழந்தை  இங்குள்ள ஒரு குடியிருப்பின் 10 வது மாடியிலிருந்து 3 வது மாடியிலுள்ள தளத்தில் விழுந்துள்ளதாக முதல் கட்டத் தகவல் கூறுகிறது. அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை கோலாலம்பூர் மருத்துவமனையின்  மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

தாயார் வீட்டின் வரவேற்பு கூடத்தில் இருந்த போது அக்குழந்தை  கழிப்பறைக்கு ஓடிச் சென்று அங்குள்ள குளியல் தொட்டியில் ஏறியுள்ளது.
பின்னர் கழிப்பறை ஜன்னல் வழியாக  மூன்றாவது மாடியில் உள்ள தீயணைப்புத் தடத்தில் விழுந்துள்ளதாக  நாங்கள் நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் மேல் விசாரணையை போலீசார் மேற்கொண்டு  வருவதாக ஏசிபி பே மேலும் கூறினார்.


Pengarang :