ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

தெலுக் பங்ளிமா காராங்கில் வெள்ளம்- 11 குடும்பங்கள் பாதிப்பு

ஷா ஆலம், ஜூன் 24- இன்று அதிகாலை முதல் பெய்து வரும் மழையின் காரணமாக கோல லங்காட் மாவட்டத்தின் தெலுக் பங்ளிமா காராங் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள 11 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த வெள்ளச் சம்பவம் தொடர்பில் தமது துறை இன்று காலை 7.19  மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் ஹபிஷாம் முகமது நோர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஆறு பேரடங்கிய குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட சோதனையில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அப்பகுதியில் 1.5 அடி உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இந்த வெள்ளம் காரணமாக துயர் துடைப்பு மையம் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சிஜங்காங்கில் உள்ள தங்கள் உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, மற்றொரு நிலவரத்தில் மரம் ஒன்று வேறோடு சாய்ந்ததில் நான்கு வாகனங்கள் சேதமுற்றன. பூலாவ் இண்டா, ஜாலான் சமூத்ராவில் நேற்று விடியற்காலை 5.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.


Pengarang :