சியோல், ஜூலை 2- தென் கொரியாவில் புதிய கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று பத்தாயிரத்திற்கும் அதிகமாக பதிவானது. அண்மைய சில மாதங்களாக இறக்கம் கண்டு வந்த அந்நோய்த் தொற்று தற்போது மறுபடியும் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது.
அந்நாட்டில் இன்று 10,715 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அதில் 173 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன. இதனுடன் சேர்த்து அந்நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 83 லட்சத்து 79 ஆயிரத்து 552 ஆக உயர்ந்துள்ளது.
தென் கொரியாவில் நேற்று நோய்த் தொற்று எண்ணிக்கை 9,528 ஆகவும் ஒரு வாரத்திற்கு முன்னர் 6,786 ஆகவும் இருந்ததாக அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு நிறுவனம் கூறியது.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு புதிதாக எழுவர் பலியான வேளையில் இந்நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,562 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் மத்தியில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதாவது உயர்வு கண்ட கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.