கோலாலம்பூர், ஜூலை 2- அந்நிய நாட்டு ஆடவரை படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் கடை உதவியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாமான் கிராமாட், ஜாலான் ஏயு2ஏ/14 எனும் முகவரியில் நிகழ்ந்த அந்த படுகொலை தொடர்பில் 22 வயதுடைய அந்த வெளிநாட்டுத் தொழிலாளி நேற்றிரவு 10.36 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாரூக் இஷாக் கூறினார்.
உடலுழைப்புத் தொழிலாளியான 37 வயதுடைய அந்நிய நாட்டவர் நெஞ்சில் கத்திக் குத்துக் காயங்களுடன் சாலையில் பிணமாகக் கிடந்தத்தை பொதுமக்கள் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக அவர் சொன்னார்.
இக்கொலையில் பயன்படுத்தப்பட்டதாக நம்ப்படும் காய்கறி வெட்டும் கத்தி ஒன்றையும் தாங்கள் சம்பவ இடத்தில் கைப்பற்றியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொலையுண்ட ஆடவரின் உடல் பரிசோதனைக்காக வேந்தர் துவாங்கு முரிஷ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரு ஆடவர்களும் செல்லத்தக்க பயணப் பத்திரங்களை கொண்டிருந்ததாக கூறிய அவர், தடுப்புக் காவல் அனுமதியைப் பெறுவதற்காக சந்தேகப் பேர்வழி இன்று அம்பாங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றார்.
இக்கொலை சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.