ஷா ஆலம், ஜூலை 13- பக்கத்தான் ஹராப்பான் 22 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த போதிலும் அக்கூட்டணி அரசு கடைபிடித்த போக்குவரத்து மற்றும் வாழ்க்கைச் செலவினக் கொள்கைகள் மிகவும் சிறப்பான வகையில் இருந்தன.
மகளிரின் உரிமைகள் மற்றும் மலாய்க்கார ர்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட திட்டங்களை பக்கத்தான் அரசாங்கம் நன்கு ஆராய்ந்து அமல்படுத்தியதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அந்த 22 மாதங்களில் நேர்மறையான நிகழ்வுகளை காண முடிந்தது. உதாரணத்திற்கு அந்தோணி லோக் கீழ் செயல்பட்ட போக்குவரத்து அமைச்சைக் கூறலாம். தற்காப்பு அமைச்சர் அம்பலப்படுத்திய விவகாரங்களைக் கண்டோம். ஊழல் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பும் மக்களுக்கு அப்போதுதான் கிட்டியது என்றார் அவர்.
டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அமல்படுத்திய வாழ்க்கைச் செலவின குறைப்பு நடவடிக்கைகள் தற்போதை விட பெரும் பயனைத் தந்தன என்றார் அவர்.
கடந்த 4 ஆம் தேதி மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் கெஅடிலான் கட்சியின் தலைவரான அன்வார் இதனைத் தெரிவித்தார்.
இனப்பாகுபாட்டைக் களைவதற்கான அனைத்துலக மாநாட்டை (ஐசெர்ட்) உதாரணம் கூறலாம். அதனை அமல்படுத்துவதாக இருந்தால் மலாய்க்காரர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். இஸ்லாம் மற்றும் தங்களின் சிறப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரமாக அதனை அவர்கள் கருதினர் என்று எதிர்க்கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.
மக்கள் குறிப்பாக மலாய்க்காரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கலக்கத்தை போக்கும் வகையில் இவ்விவகாரம் மறுபடியும் விவாதிக்கப்பட வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.