ECONOMYMEDIA STATEMENT

மனைவி தாக்கி கணவர் மரணம்- ஜோகூர் பாருவில் சம்பவம்

ஜோகூர் பாரு, ஜூலை 15- மனைவியால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் ஆடவர் பலத்த காயங்கள் காரணமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இங்குள்ள தாமான் டாயா, நிப்பா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று காலை நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து காலை 7.50 மணியளவில் தாங்கள் தகவல் பெற்றதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் கூறினார்.
லீ மிங் ஹாவ் (வயது 44) என்ற அந்த ஆடவரின் உடல் வீட்டின் தரையில் கிடந்ததாக அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய அவ்வாடவரின் மனைவியை தாங்கள் கைது செய்ததோடு இன்று அவருக்கு எதிரான நீதிமன்ற தடுப்பு காவல் அனுமதியைப் பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கொலைச் சம்பவத்தை அத்தம்பதியரின் 11 வயது மகன் நேரில் கண்டதாக கூறிய அவர், அத்தம்பதியருக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது என்றார்.
கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் நோக்கம் குறித்து நாங்கள் விசாரணை வருகிறோம். இச்சம்பவம் தொடர்பில் விரிவான பத்திரிகை அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என்றார் அவர்.

இதனிடையே, அத்தம்பதியரிடையே அடிக்கடி சண்டை மூளும் என்றும் குடும்பத் தகராறு தொடர்பில் அப்பெண் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது என்றும் குடியிருப்பாளர்களில் ஒருவரான ஜைடா நெங் (வயது 46) கூறினார்.

அந்த பெண்மணி நல்லவர்தான். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வார். அவர் அடிக்கடி கோபப்படுவதோடு மூர்க்கத்தனமாகவும் நடந்து கொள்வார். மாண்டரின் மொழியிலும் ஏதோ பேசிக் கொண்டிருப்பார் என அவர் தெரிவித்தார்.


Pengarang :