ஷா ஆலம், ஜூலை 19- பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை வேறு பயன்பாட்டிற்காக தகுதி மாற்றம் செய்வதற்கு முன் பொது விசாரணை நடத்தும் ஒரே மாநிலம் சிலாங்கூர் என்று எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் டத்தோ தக்கியுடீன் ஹாசன் கூறினார்.
2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் அதாவது 1985 ஆம் ஆண்டு வனச் சட்டத்தின் 11வது பிரிவில் திருத்தம் செய்யப்படுவதற்கு முன்பாகவே சிலாங்கூர் இத்திட்டத்தை அமல்படுத்தியதாக அவர் சொன்னார்.
2011 ஆம் ஆண்டு 11வது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே பொது விசாரணையை அறிமுகப்படுத்திய அல்லது மேற்கொண்ட ஒரே மாநிலம் சிலாங்கூர் மட்டுமே ஆகும்.
ஆகவே, பொது விசாரணைக்கான செயல்முறை ஏற்கனவே உள்ளது. சிலாங்கூர் அதைச் செய்ய முடியும் என்பதோடு இவ்விஷயத்தில் அக்கறையும் கொண்டுள்ளது. இது பின்னர் தேசிய நில மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நினைக்கிறேன் என்று தாக்கியுடீன் நேற்று மக்களவையில் கூறினார்.
1984 ஆம் ஆண்டு தேசிய வனச்சட்டத்தில் திருத்தங்களை முன்மொழியும்போது வனப் பகுதிகளை தகுதி மாற்றம் செய்வது குறித்து பொதுமக்களின் கருத்துகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா என்று சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஹனிபா மைடின் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்