ECONOMYMEDIA STATEMENT

சபாக் பெர்ணமில் தீவிபத்து- எட்டு கடைகள் அழிந்தன

ஷா ஆலம், ஜூலை 19- சபாக் பெர்ணம், ஜாலான் மெந்திரியில் உள்ள எட்டு இரண்டு மாடி கடைகள் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் அழிந்தன.

இத்தீச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 11.56 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.

சபாக் பெர்ணம் தீயணைப்பு நிலையம், சுங்கை பெசார் தீயணைப்பு நிலையம், சிகிஞ்சான் தீயணைப்பு நிலையம், ஊத்தாங் மெலிந்தாங் தீயணைப்பு நிலையம் ஆகியவற்றிலிருந்து 34 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

பின்னிரவு 1.31 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்ட வேளையில் 2.10 மணியளவில் முற்றாக அணைக்கப்பட்டது . இச்சம்பவத்தில் அக்கடைகள் யாவும் 90 விழுக்காடு தீயில் அழிந்தன என்றார் அவர்.

நான்கு டயர் கடைகள், இரு உணவகங்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பு கடை மற்றும் ஒரு நான்கு இலக்க கடை ஆகியவை தீவிபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளாகும்.


Pengarang :