சிப்பாங், ஜூலை 23- பெர்மிங்ஹாம் 2022 காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக மலேசிய விளையாட்டாளர்கள் அடங்கிய குழு நேற்று லண்டன் புறப்பட்டது.
பூப்பந்து ஸ்குவாஷ், திடல் தடம், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, பிங் போங், வலைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
நேற்றிரவு 11.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து லண்டன், ஹீத்ரோ செல்லும் விமானத்தில் அந்த விளையாட்டாளர்கள் பயணமாகினர்.
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் மலேசிய அணியில் 104 விளையாட்டாளர்கள், 44 அதிகாரிகள் மற்றும் 13 பணியாளர்கள் அடங்கிய 162 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இப்போட்டியில் குறைந்தது ஆறு தங்கப் பதக்கங்களை வெல்ல இக்குழுவினர் உறுதி பூண்டுள்ளனர்.
காமன்வெல்த் 2022 போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்டு 8 வரை நடைபெறுகிறது. மொத்தம் 72 நாடுகளைச் சேர்ந்த 6,500 விளையாட்டாளர்கள் இப்போட்டியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.