பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24- வரும் புதன் கிழமை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள முதல் சிலாங்கூர் திட்டம் மாநில சுற்றுலாத் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தும் என டூரிசம் சிலாங்கூர் எதிர்பார்க்கிறது.
உலகை உலுக்கிய கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும் என்று டூரிசம் சிலாங்கூர் தலைமை செயல் முறை அதிகாரி அஸ்ருள் ஷா முகமது கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வரவில்லை. இதனால் அந்நியச் செலாவணி வாயிலான வருமானம் பாதிப்படைந்து நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே, விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் முதல் சிலாங்கூர் திட்டம் மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களிலும் 12 ஊராட்சி மன்றங்களிலும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு புத்துயிரளிக்கும் என நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
கோத்தா டாமன்சாராவிலுள்ள ஸ்ரீ சிலாங்கூர் கோல்ப் கிளப்பில் நேற்று நடைபெற்ற 2022 டூரிசம் சிலாங்கூர் வெற்றியாளர் கிண்ண கோல்ப் போட்டியின் நிறைவு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.