கோலாலம்பூர், ஆக 2– குறைந்த வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக சந்தேகிக்கப்படும் சுயேட்சை சமய போதகருக்கு எதிரான விசாரணை அறிக்கை துணை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த விசாரணை அறிக்கையை சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் ஆய்வு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு ஏதுவாக அவ்வறிக்கையை தாங்கள் தாக்கல் செய்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மின் அபு காசிம் கூறினார்.
மேல் பரிசீலனைக்காக அந்த விசாரணை அறிக்கையை நேற்று துணை பப்ளிக் புரோசிகியூட்டரிடம் ஒப்படைத்துள்ளோம் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
அந்த 30 வயதான சமயப் போதகருக்கு எதிரான தடுப்புக் காவல் அனுமதி கடந்த மாதம் 27 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் பேராக் மாநில போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
வயது குறைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் பேரில் அந்த சமய போதகர் கடந்த மாதம் 18 ஆம் தேதி மாலை 4.50 மணியளவில் கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டார்.