கோல பிலா, ஆக 5- கடந்த மாதம் ரெம்பாவ் நீதிமன்ற லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்ததாக வேலையில்லா ஆடவருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி நோர்மா இஸ்மாயில் முன்னிலையில் வாசிக்கப்பட்ட தமக்கெதிரான இரு குற்றச்சாட்டுகளை முகமது இக்ராம் சி.மன்சோர் என்ற அந்த நபர் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் ரெம்பாவ் நீதிமன்ற லாக்கப்பில் இருந்த போது 54.47 கிராம் கொனாபிஸ் போதைப் பொருளை வைத்திருந்ததாக அவருக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஆயுள் தண்டனை அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் குறையாத சிறைத்தண்டனை, 10க்கும் குறையாக பிரம்படிகள் வழங்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 12(2) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வகை செய்யும் 39ஏ(2)ஆம் பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அதே தேதியில், அதே இடத்தில் 3.97 கிராம் ஹெரோயினை வைத்திருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் முகமது அமிருள் நோர் ஹஷிமி வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.