ECONOMYMEDIA STATEMENT

புறாக்களுக்கு விஷமிட்டதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், ஆக 10- கடந்த மாதம் புறாக்களுக்கு விஷம் கொடுத்ததாக இரண்டு இந்தோனேசிய ஆடவர்கள் உட்பட 4 பேர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டனர்.

துப்பரவுத் தொழிலாளர்களாக வேலை செய்யும் இந்தோனேசிய பிரஜைகளான ஃபதுர் ரோஸி அர்சிஜோ (வயது 22), மற்றும் அப்துல் ரஹ்மான் சௌஜி (வயது 32) ஆகியோர்  நீதிபதி ரசிஹா கசாலி முன் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

அதே சமயம், நிர்வாக உதவியாளர்களாக பணிபுரியும் இரண்டு உள்ளூர் பெண்களான நூர் ஹசிரா மசுவான் (வயது 32) மற்றும்  நூருல் நஜ்வா ஷஃபிகா (வயது 22)ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

கடந்த ஜூலை 21ஆம் தேதி மாலை 3.53 மணியளவில் பத்து தீகாவில் உள்ள ஒரு தொழிற்சாலையின் முன் முறையான அனுமதி அல்லது நியாயமான காரணமின்றி புறாக்களுக்கு விஷமிட்டதாக அவர்கள் மீது கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது.

2015 ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டத்தின்  31 (1) (a) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட குற்றவியல் சட்டத்தின் 34 வது பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளனர்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் வெ.20,000  முதல் வெ.100,000 வரை அபராதம், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் இரண்டுமே விதிக்க இச்சட்ட விதி வகை செய்கிறது.

வழக்கின் ஆதாரங்களை வாசிப்பதற்கும் ஃபத்தூர் ரோசி மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக தண்டனை வழங்கவும் குற்றஞ்சாட்டப்பட்ட இரு பெண்கள் தொடர்புடைய   ஆவணங்களை சமர்ப்பிக்கவும் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இரு உள்ளூர் பெண்களையும் தலா 5,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

எனினும், குடிநுழைவுச் சட்டத்தின் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இரு இந்தோனேசிய ஆடவர்களுக்கும் ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை.


Pengarang :