ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வேளாண் உணவுத் துறையில் ஈடுபடுவோருக்கு வெ.500,000 வரை கடனுதவி- அக்ரோபேங்க் வழங்குகிறது

செர்டாங், ஆக 11– நாட்டின் முக்கியத் துறைகளில் ஒன்றாக விளங்கும் வேளாண் உணவுத் துறை இளைஞர்களுக்கு அளப்பரிய வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதாக மலேசிய விவசாய மேம்பாட்டு வங்கியின் (அக்ரோபேங்க்) தொடர்பு அதிகாரி அமினுடின் அமினோன் கூறினார்.

வேளாண் உணவு தயாரிப்பு பொருள்களுக்கு தேவை மிகுதியாக இருப்பதால் இத்துறையில் இளைஞர்களின் பங்கேற்பு அவசியம் தேவைப்படுவதோடு இதிலுள்ள வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்தி வளர்ச்சி காண்பதற்குரிய சாத்தியமும் உள்ளது என்று அவர் சொன்னார்.

உதாரணத்திற்கு கோழி வளர்ப்பு துணைத் துறை தற்போது அத்தியாவசியமான ஒன்றாக ஆகியுள்ளதோடு புரோட்டின் நிறைந்த அந்த உணவுப் பொருள் மலேசியர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

இத்துறையில் மனித வளம் குறிப்பாக இளைஞர்களின் பங்கேற்பு அதிகமாக தேவைப்படுகிறது. இளைஞர்களின்  பங்கேற்பின் வழி வேளாண் உணவுத் துறையை வளப்படுத்தவும் உணவு உத்தரவாதத்தை வலுப்படுத்தவும் இயலும். இது தவிர, உணவு விநியோகத்தை நிலைப்படுத்தி வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதையும் குறைக்க இயலும் என்றார் அவர்.

இளைஞர்கள் வேளாண் உணவுத் திட்டத்தில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கில் அக்ரோ-யூத் எண்டப்ரேனியர் ஸ்கிம் எனும் திட்டத்திற்கு ஐந்து கோடி வெள்ளியை அக்ரோ பேங்க் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறிய அவர், இத்திட்டத்தின் வாயிலாக வேளாண் துறையில் ஈடுபடுவோருக்கு வெ.50,000 முதல் வெ. 500,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது என்றார்.


Pengarang :