ஷா ஆலம், ஆக 11- அந்நியத் தொழிலாளர்களை சுரண்டிப் பிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பில் இரு அந்நிய பிரஜைகள் உள்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிள்ளான், கம்போங் சுங்கை ஊடாங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அந்நால்வரும் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ச்சா ஹோங் போங் கூறினார்.
புக்கிட் அமான் ஆள் கடத்தல் மற்றும் அந்நியத் தொழிலாளர் பதுக்கல் தடுப்பு பிரிவின் தலைமை முதன்மை இயக்குநர் எஸ்ஏசி பாடில் மார்சுஸ் தலைமையிலான குழு மற்றும் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை ஆகியவை இந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
இச்சோதனை நடவடிக்கையின் போது 38 முதல் 43 வயது வரையிலான அந்த நான்கு நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் பணியாளர்கள் என நம்பப்படும் அந்நிய நாட்டு ஆண் மற்றும் பெண் ஆகியோரும் அடங்குவர் என அவர் குறிப்பிட்டார்.