ECONOMYMEDIA STATEMENT

ஒன்பது மோட்டார் சைக்கிள்கள் தீயில் சேதம்- பினாங்கு அடுக்குமாடி குடியிருப்பில் சம்பவம்

ஜோர்ஜ் டவுன், ஆக 18- ஜெலுத்தோங், ஜாலான் குராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஒன்பது மோட்டார்  சைக்கிள்கள் சேதமடைந்தன.

இத்தீச்சம்பவம் தொடர்பில் அதிகாலை 3.26 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஜாலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் பவுசியான் இஸூவான் அப்துல்லா கூறினார்.

சம்பவ இடத்தை நாங்கள் அடைவதற்குள் பொது மக்கள் தீயை அணைத்து விட்டனர். தீ மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக அப்பகுதியில் முழுமையாக சோதனை செய்தோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் ஒன்பது மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமுற்ற வேளையில் டோயோட்டா வியோஸ் ரகக்கார் ஒன்று ஐந்து விழுக்காடு சேதத்திற்குள்ளாகியிருந்தது என்றார் அவர்.

இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறிய அவர், தீக்கான காரணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :