ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நான்கு வீடுகள் தீயில் அழிந்தன- குடியிருப்பாளர்கள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்

மலாக்கா, ஆக 19- இங்கு நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு வீடுகள் முற்றாக அழிந்தன. தீயில் சிக்கிக் கொண்டபெற்றோர் மற்றும் சகோதரியை ஆடவர் ஒருவர் வெற்றிகரமாக காப்பாற்றினார்.

இந்த உயிர்காக்கும் போராட்டத்தின் போது தொழில்நுட்பராக பணிபுரியும் சியா வேய் லியாங் (வயது 43) என்ற ஆடவர் நெஞ்சு, வலது கை, ஆகியவற்றில் தீக்காயங்களுக்குள்ளானார்.

இங்குள்ள புக்கிட் பியாத்து அடுக்குமாடி குடியிருப்பின் எதிரே உள்ள வாக்காப் குடியிருப்பில் நேற்றிரவு 10.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஐம்பது ஆண்டுகள் பழைமை வாய்ந்த நான்கு பகுதி பலகை வீடுகள் சேதமுற்றன.

இந்த தீவிபத்து நிகழ்ந்த போது தாம் தனது சொந்த வீட்டில் இருந்ததாகவும், தன் தாயார் வீட்டில் தீ ஏற்பட்டதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சியா சொன்னார்.

தீயில் சிக்கிய குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றியப் பின்னர் தீயை  அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் சொன்னார்.

வெகு விரைவாகப் பரவிய தீ சிறிது நேரத்தில் முழுமையாகச் சூழ்ந்து வீடுகளை முற்றாக நாசமாக்கின என்றார் அவர்.


Pengarang :