ஷா ஆலம், ஆக 21- தற்போது பதிவாகி வரும் மழையின் அளவைக் கருத்தில் கொண்டு மாநிலத்திலுள்ள முக்கிய ஆறுகளில் நீர் மட்டத்தை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வரும்.
எந்வொரு சாத்தியத்தையும் எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அசம்பாவிதங்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று தனது பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
தாமான் ஸ்ரீ மூடாவில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் தொடர்பில் தாங்கள் தகவலைப் பெற்றுள்ளதாகவும் நீர் விரைவாக வடிவதற்கு ஏதுவாக வெள்ளத் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை பெய்த கடுமையான மழையின் காரணமாக தாமான் ஸ்ரீ மூடா வட்டாரத்தில் 0.7 மீட்டர் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.