கிள்ளான், ஆக 31- தேசிய தினத்தை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதி “ஜெலாஜா மெர்டேக்கா“ எனும் வருடாந்திர நிகழ்வை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.
இங்குள்ள ஜாலான் டத்தோ யூசுப் ஷஹாபுடின் ஃபுட்சால் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஃபுட்சால் விளையாட்டு மைதானம் தவிர்த்து தாமான் குபு குபு, தாமான் மஸ்னா மற்றும் தாமான் கிளாங் ஜெயா ஆகிய மூன்று இடங்களிலும் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
ஒவ்வொரு இடத்திலும் ஃபுட்சால், மக்கள் நிகழ்ச்சிகள், வர்ணம் தீட்டும் போட்டி என வெவ்வேறு அங்கங்கள் நடைபெற்றன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுக் கூடைகளும் ஹாஜி ஊக்குவிப்பும் வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக தொடரப்படவில்லை. இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாக சமுதாயத்தில் ஒற்றுமையை மேம்படுத்தவும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பை வளர்க்கவும் இயலும் என்றார் அவர்.
முன்னதாக அவர், சோலார் எஃப்.சி. டைகர் மோட்டார் சைக்கிள் கிளப்பின் உயர்சக்தி கொண்ட மோட்டார் சைக்கிளில் அவர் இந்த நிகழ்வுக்கு வருகை புரிந்தார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக வர்ணம் தீட்டும் போட்டி மற்றும் ஃபுட்சால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு குணராஜ் பரிசுகளை எடுத்து வழங்கியதோடு 65 பேருக்கு உணவுக் கூடைகளையும் வழங்கினார்.