ஷா ஆலம், செப் 1- வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கடல் பெருக்கு காரணமாக கோல சிலாங்கூர் மாவட்டத்தின் 13 இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஈஜோக், ஜெராம், தஞ்சோங் காராங், பாரிட் 4 சிகிஞ்சான் உள்ளிட்ட பகுதிகள் ஆபத்து நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று கோல சிலாங்கூர் மாவட்ட பேரிடர் செயல்குழுவின் தலைவர் முகமது ராய்ஸ் ராட்ஸ்வான் கூறினார்.
அப்பகுதியில் உயர் அலைகளோடு கடும் மழையும் பெய்யும் பட்சத்தில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.
நடப்பு சீதோஷண நிலையைக் கருத்தில் கொண்டு அசம்பாவிதங்களை எதிர்கொள்வதற்கு பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் சொன்னார்.
உயரலைகள் ஏற்படும் இக்காலக்கட்டத்தில் கிராமத் தலைவர்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்துக் குழுக்களும் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிவாரண மையங்கள், மீட்பு பணிக்கான சாதனங்கள் மற்றும் தளவாடங்கள் அனைத்து முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.