பெட்டாலிங் ஜெயா, செப் 10- சிலாங்கூர் மக்களின் சிறப்பான வாழ்கையை உறுதி செய்வதற்கு மாநில அரசு பல்வேறு உதவித் திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வரும்.
கடந்த 2008 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல் பக்கத்தான் அரசு மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வரும் அதே வேளையில் அவர்களின் தேவைகளுகேற்ப திட்டங்களை மாற்றியமைத்தும், திருத்தியமைத்தும் தரம் உயர்த்தியும் வருகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில மக்கள் யாரும் கைவிடப்படாமலிருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (ஐ.எஸ்.பி.) கீழ் 42 வகையான உதவித் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக சமீபத்தில் சிலாங்கூர் ஆயுள் காப்புறுதித் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.
மக்களின் நலனை காக்கும் ஒரே மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. நம்மிடம் மிகபெரிய தொகை கையிருப்பில் உள்ளதால் அதனைக் கொண்டு மக்களுக்கு உதவி புரிய விரும்புகிறோம். ஒருவருக்கொருவர் நட்புறவையும் பரிவையும் வளர்த்துக் கொள்வதை காண விரும்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கெஅடிலான் இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற பெந்தாஸ் அனாக் மூடா நிகழ்வில் உரையாற்றும் போது மாநில கெஅடிலான் தலைவருமான அமிருடின் இவ்வாறு கூறினார்.
அறுபது கோடி வெள்ளி மதிப்பிலான இந்த ஐ.எஸ்.பி. திட்டத்தின் கீழ் 12 குடும்ப சமூக நலத் திட்டங்கள், 10 சுகாதாரத் திட்டங்கள், எட்டு கல்வித் திட்டங்கள், ஏழு வீடமைப்புத் திட்டங்கள், ஐந்து வேலை வாய்ப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.