ECONOMYMEDIA STATEMENT

வெ.900,000 போலி பணக் கோரிக்கை தொடர்பில் அறுவர் கைது

ஷா ஆலம், செப் 13- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ சி.சி.) கடந்த 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் நடந்த கிட்டத்தட்ட 900,000 வெள்ளி மதிப்புள்ள பொய்யான பணக் கோரிக்கை தொடர்பாக நான்கு பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளது.

முப்பது முதல்  59 வயது வரையிலான அந்த சந்தேக நபர்கள் நேற்று மாலை 5.00  மணியளவில்  வாக்குமூலம் வழங்குவதற்காக  இங்குள்ள சிலாங்கூர் எம்.ஏ.சி.சி. தலைமையகம் வந்த போது கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் மூவர்  ஒரு கட்டுமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி, இயக்குநர் மற்றும் கணக்காளர் ஆகியோர் ஆவர்.கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் சிலாங்கூரில் வெள்ளத் தடுப்பு மற்றும் கால்வாய் தரம் உயர்த்தும் பணிக்காக இரு நிறுவனங்கள் சமர்ப்பித்த பணக் கோரிக்கையை அவர்கள் அங்கீகரிப்பதில் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

வடிகால்களை  மேம்படுத்தும் பணிக்காக 250,000 க்கும் அதிகமானத் தொகையும்  வெள்ள தணிப்புத் திட்டத்திற்கு 600,000 வெள்ளிக்கும் க்கும் அதிகமானத் தொகையும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் எம்.ஏ சி.சி. இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீமைத் தொடர்பு கொண்டபோது, கைது இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியதுடன்   2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் பிரிவு 18ன் கீழ் இது குறித்து விசாரிக்கப்படுவதாகக் கூறினார்.

சந்தேக நபர்களை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான ஆணை இன்று காலை ஷா ஆலம்  நீதிமன்றத்தில் பெறப்படும் என்றும் அவர்  தெரிவித்தார்.


Pengarang :