சுபாங் ஜெயா, செப் 16- நீண்ட காலமாக இழுபறியாக இருந்து வந்த பங்சாபுரி பிஜேஎஸ் 7/15 அடுக்குமாடி குடியிருப்பு வீட்டு மனை பட்டா பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பைச் சேர்ந்த 420 பேர் தங்களின் பட்டாவை பெற்றுள்ளனர்.
மாநில அரசு, சன்வே புரோப்பர்ட்டி, சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகம், கூட்டு நிர்வாக மன்றம் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்பு காரணமாக இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஷி கூறினார்.
இந்த வீட்டு மனைப் பட்டா பிரச்னை கடந்த 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் சொன்னார்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10வது புளோக்கைச் சேர்ந்த பலர் தங்களின் வங்கிக் கடனை முழுமையாகச் செலுத்தி விட்ட போதிலும் பட்டா பெறுவதில் அவர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்த வீடுகளுக்கு பட்டா பெறுவதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டேன். எனினும், அந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ள நிலம் பெட்டாலிங் மற்றும் டாமன்சாரா ஆகிய இரு துணை மாவட்டங்களின் (முக்கிம்) கீழ் இருந்த காரணத்தால் இவ்வகாரம் சிக்கல் நிறைந்து காணப்பட்டது.
இரு துணை மாவட்ட எல்லைகளையும் மாற்றி ஒரே மாவட்டத்திற்குள் அந்த குடியிருப்பு வரும்படி செய்யும் பணியில் ஈடுபட்டோம். இக்காலக்கட்டத்தில் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் ஏற்பட்டதால் இந்நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டது என்றார் அவர்.
இன்று பண்டார் சன்வே சமூக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டாவை வழங்கும் அடையாள நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.