கிள்ளான், செப் 18- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் மக்கள் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் தஞ்சோங் சிப்பாட் தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த 500 பேர் ஆண்டுக்கு 3,600 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவர்.
இந்த உதவித் திட்டத்தின் வழி பயன்பெறத் தகுதியுள்ள பலர் அடையாளம் காணப்பட்டு விட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா கூறினார்.
முன்பு கிஸ் எனப்படும் சிலாங்கூர் விவேக அன்னையர் பரிவுத் திட்டம் மற்றும் கிஸ் ஐ.டி. எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான திட்டத்தில் ஏற்கனவே பங்கு பெற்றவர்களுக்கு இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் முதல் தேதி திறக்கப்பட்டது. அது தொடங்கிய முதல் இதுவரை 2,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும், உண்மையிலே தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே உதவி வழங்க விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
முன்பு நிகழ்ந்ததை போல் கவனக் குறைவாக இருப்பதை அல்லது தகுதிக்கு மீறியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை தவிர்க்க விரும்புகிறோம். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தரப்பினர் மட்டுமே இதில் பயன் பெறுவதை உறுதி செய்வது எங்களின் நோக்கமாக உள்ளது என்றார் அவர்.
இங்குள்ள ஜாலான் துங்கு டியாவுடினில் உள் பூம்டவுன் கிளாங் எனும் பகுதியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மொத்தம் 10 கோடியே 80 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த பிங்காஸ் திட்டத்தின் வழி சுமார் 30,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.எஸ்.பி. எனப்படும் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்திலுள்ள 44 உதவி முன்னெடுப்புகளில் ஒன்றாக இந்த பிங்காஸ் திட்டம் விளங்குகிறது. இதன் மூலம் வசதி குறைந்தவர்கள் மாதம் 300 வெள்ளி வீதம் ஆண்டுக்கு 3,600 வெள்ளியை உதவித் தொகையாகப் பெறுவர்.