பெட்டாலிங் ஜெயா, செப் 18- தற்போதைய வர்த்தக உலகில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வரும் ஸ்டார்ட் அப் எனப்படும் தொடக்க நிறுவனங்களுக்கு உதவ மாநில அரசு எப்போதும் தயாராக உள்ளதாக தொழிலியல் மற்றும் வர்த்தகத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
நிதியைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் தவிர்த்து வழிகாட்டுதலைப் பெறுவதிலும் விற்பனையை அதிகரிப்பதிலும் இந்நிறுவனங்கள் சிக்கலை எதிர்கொள்கின்றன என்று டத்தோ தெங் சாங் கிம் கூறினார். ஆகவே, உள்ளூர் தொடக்க நிறுவனங்கள் திறன்களையும் ஒருங்கமைப்பையும் உருவாக்குவதில் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் பொருளாதாரக் கழகம் (சீடேக்) கடப்பாடு கொண்டுள்ளது என்று நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் சிலாங்கூர் ஆக்சிலரேட்டர் புரோகிராம் (எஸ்.ஏ.பி.) 2022 போன்ற உந்து சக்தி திட்டங்களை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம், இது தொடக்க நிறுவனங்களுக்கு திறமை மற்றும் அதிகாரம் அளிப்பதை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.
நேற்று இங்குள்ள ஒன் வேர்ல்ட் ஹோட்டலில் 2022 எஸ்.ஏ.பி. டெமோ தினத்தை தொடங்கி வைத்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் முதல் 20 தொடக்க நிறுவனங்களில் ஐந்து 50,000 ம வெள்ளி மதிப்புள்ள ரொக்கப் பரிசுகளையும் 5,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமேசோன் வேப் செர்விசஸ் கிரெடிட்களையும் பரிசாகப் பெற்றன.