ஷா ஆலம், செப் 19– சுக்மா போட்டியில் கடந்த வாரம் இலக்காக கொள்ளாத ஏழு ஆட்டங்களில் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் மேலும் அதிகமான பதக்கங்களைப் பெற சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.
இவ்வாரம் பதக்கங்களைப் பெறுவதற்கு இலக்காக கொள்ளப்பட்ட விளையாட்டுகளில் நீச்சல், குறி சுடுதல் மற்றும் கால்பந்து ஆகியவையும் அடங்கும் என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
நாம் தங்கப் பதக்கத்தை இலக்காக கொண்ட பல போட்டிகளில் இன்று தொடங்கவுள்ளன. வரும் புதன் அல்லது வியாழக்கிழமைகளில் சிலாங்கூர் அணிக்கு பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் கிடைத்த தங்கப் பதக்கங்கள் நாம் இலக்காக கொள்ளாத விளையாட்டுகள் மூலம் பெறப்பட்டவையாகும். இது சிலாங்கூர் மாநிலத்திற்கு குறிப்பாக, மாநில விளையாட்டு மன்றத்திற்கு (எம்.எஸ்.என்.) கிடைத்த போனசாகும் என்றார் அவர்.
சிலாங்கூர் தற்போது ஏழு தங்கப் பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. தலைநகர் புக்கிட் ஜாலில் அரங்கில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி இந்த 20வது சுக்மா போட்டி நடைபெற்று வருகிறது.