சிரம்பான், அக் 2- இரத்த தானம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புகளை சுகாதார அமைச்சு அவ்வப்போது மேம்படுத்தும் என்று அதன் அமைச்சர் கைரி ஜமாலுடீன் தெரிவித்தார். இந்த ஊக்குவிப்புகள் பணமாக அல்லாமல் சுகாதார சேவைகளுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று அவர் கூறினார். இரத்ததானம் செய்வோருக்கான ஊக்குவிப்பு சலுகைகளை நாங்கள் அவ்வப்போது மேம்படுத்துவோம். ஆனால், அவை சுகாதார சேவைகளுடன் தொடர்புடையதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இரண்டாம் வகுப்பு வார்டுகளில் சிகிச்சை பெறுவது அல்லது குறிப்பிட்ட சிகிச்சைக்கு முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றை அந்த சலுகைகள் உள்ளடக்கியிருக்கும். ரொக்க ஊக்குவிப்புகளை வழங்க எந்த திட்டமும் இல்லை. ஒருவேளை, இதற்குப் பிறகு, மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமின்றி சுகாதாரத் தடுப்பு நடவடிக்கைகளும் இதில் உள்ளடக்கப்படும் சாத்தியம் உள்ளது என்றார் அவர். நேற்று இங்குள்ள லெங்கெங் சுகாதார கிளினிக் கட்டுமானத் திட்ட ஒப்படைப்பு நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். இதற்கிடையே, மைசெஜாத்ரா செயலியில் புதிய அம்சமாக இரத்த தான அட்டை சேர்க்கப்பட்டது பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கைரி சொன்னார். இரத்த தானம் செய்பவர்கள் இனி தங்கள் அட்டைகளை உடன் கொண்டு வர வேண்டியதில்லை. தற்போது நாங்கள் கார்டுகளை வழங்கியுள்ளோம். இந்த முறை மேலும் மேம்பாடுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையும் அவர்கள் இரத்த தானம் செய்யும் போது அவர்களின் பதிவை உள்ளிடுவோம். இனியும் அவர்கள் தங்களுடைய சிவப்பு புத்தகத்தை உடன் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.