கிள்ளான், அக் 2- வரும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வாயிலாக அடுத்தாண்டில் இணையம் வழி வர்த்தக நடவடிக்கையை அதிகரிப்பதற்கான திட்டங்களை மாநில அரசு விரிவுபடுத்தவுள்ளது.
தொழில்முனைவோரின் வருமானத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
தற்போது வர்த்தக நடவடிக்கைகள் ஊக்கமூட்டும் வகையில் இல்லாததை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இங்குள்ள கம்போங் குவாந்தான் பள்ளிவாசல் கார் நிறுத்துமிடத்தில் நேற்று நடைபெற்ற மலிவு விற்பனையின் போது அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
தொழில்முனைவோர் கிளினிக் பங்கேற்பாளர்களின் நிதி நிலை மற்றும் ரொக்க பரிவர்த்தனை மீது வருடாந்திர வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாம் தொழில்முனைவோரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றால் அவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உருவாகும். தரமான மற்றும் போட்டியிடும் ஆற்றல் கொண்ட பொருள்களை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிக்கவிருக்கிறோம் என அவர் சொன்னார்.
வரும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இம்மாதம் 28 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.