கோலாலாம்பூர், அக் 5- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடுக்க வகை செய்யும் அரசியல்மைப்புச் சட்டம் (திருத்தம்) (எண்.3) இன்று முதல் அமலுக்கு வருவதாக நாடாளுமன்ற மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர் கூறினார்.
இந்த சட்டத்திற்கு கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி மாமன்னரின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து இம்மாதம் 6 ஆம் தேதி அது சட்டம் ஏ 1663 என ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
சட்டம் ஏ 1663 பிரிவு 1(3)க்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டம் (திருத்தம்) (எண்.3) வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி அமலுக்கு வர மாட்சிமை தங்கிய பேரரசர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அந்த சட்டம் சற்று முன்னர்தான் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. நான் உங்கள் முன் வாக்குறுதியளித்தபடி எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது வான் ஜூனைடி தெரிவித்தார்.
இந்த சட்ட மசோதா கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 209 உறுப்பினர்கள் ஆதரவளித்த வேளையில் 11 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.