ஈப்போ, அக் 7- விரைவு பஸ் ஒன்று டிரெய்லர் லாரியின் பின்புறம் மோதிய சம்பவத்தில் அந்த பஸ்சின் ஓட்டுநர் கடுமையான காயங்களுக்குள்ளானதோடு மேலும் இரு பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
இச்சம்பவம் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 264வது கிலோ மீட்டரில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் நிகழ்ந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த விரைவு பஸ்சில் 15 பேர் பயணம் செய்து கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.
இந்த விபத்து குறித்து அதிகாலை 2.30 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து மேரு ராயா தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை அடைந்த போது இரும்புக் கம்பிகளை ஏற்றிருந்த டிரெய்லர் லாரியின் பின்புறம் பஸ் மோதியுள்ளதைக் கண்டோம். சாலையின் ஓரத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காணப்பட்டது.
பஸ்சின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டிருந்த ஓட்டுநரை உபகரணங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.