சபாக் பெர்ணம், அக் 16- விரைவில் வரவிருக்கும் பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) கூட்டணி சிலாங்கூரில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்பு உள்ளது. நேற்றிரவு இங்கு ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தபின் செய்தியாளர் சந்திப்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த நம்பிக்கையைத் தெரிவித்தார். நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை ஹராப்பான் கூட்டணிவெல்வதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என நாங்கள் நம்புகிறோம் என்று சிலாங்கூர் மாநில ஹராப்பான் கூட்டணித் தலைவருமான அவர் கூறினார். கடந்த வாரம் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், 15வது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த வாரம் அறிவித்தார். அதே சமயம், தங்கள் வசமுள்ள சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்படாது என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கடந்த 5 ஆம் தேதி அறிவித்தது. சிலாங்கூரில் 22 நாடாளுமன்ற இடங்களும் 56 சட்டமன்ற இடங்களும் உள்ளன.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/10/MB6-960x630.jpg)