ECONOMYMEDIA STATEMENTSELANGOR

புகைப் போக்கியைத் திருட முயன்றவர் காரில் நசுங்கி மாண்டார்- தெலுக் பங்ளிமா காராங்கில் சம்பவம்

ஷா ஆலம், அக் 20- சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் புகைபோக்கியைத் திருட முயன்ற நபர் அக்காரின் அடியில் சிக்கி உடல் நசுங்கி மாண்டார். இச்சம்பவம் தெலுக் பங்ளிமா காராங், தாமான் ஜெயா உத்தாமாவில் நேற்று நிகழ்ந்தது.

புகைபோக்கியை அகற்றுவதற்கு ஏதுவாக காரை உயர்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேக் சாதனம் திடீரென சரிந்ததைத் தொடர்ந்து அவ்வாடவர் காரின் அடியில் சிக்கி உயிரிழந்ததாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அகமது ரிட்வான் முகமது நோர் சாலே கூறினார்.

நேற்று அதிகாலை 4.00 மணிக்கும் 6.00 மணிக்கும் இடையே நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் இச்சம்பவத்தின் போது 40 வயது மதிக்கத்தக்க அந்த உள்ளூர் ஆடவர் தன் நண்பருடன் கார் ஒன்றை ஜேக் சாதனம் மூலம் உயர்த்தி அதன் அடியிலுள்ள புகைப் போக்கியை திருட முயன்றதாக அவர் சொன்னார்.

அந்த ஜேக் சாதனம் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து காரின் அடியில் அவ்வாடவர் சிக்கி உயிரிழந்தார் என நம்பப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைக்கப்பெற்றத்தைத் தொடர்ந்து 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று காலை 10.45 மணியளவில் தெலுக் பங்ளிமா காராங் பகுதியில் தாங்கள் கைது செய்ததாக அவர் மேலும் சொன்னார்.

கைது செய்யப்பட்ட நபர் திருட்டு, போதைப் பொருள் குற்றங்கள் உள்பட ஏழு குற்றப்பதிவுகளை கொண்டிருப்பது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தடுப்புக் காவல் அனுமதியைப் பெறுவதற்காக அவர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றார்.


Pengarang :