ஷா ஆலம், அக் 21- கிள்ளான், கம்போங் சுங்கை பினாங், ஜாலான் ஷபாடுவில் தீப்பற்றி எரிந்த பெரோடுவா கஞ்சில் காரில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்னும் அடையாளம் காணப்படாத அந்த ஆடவரின் சடலம் காரின் ஓட்டுநர் இருக்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.
இன்று அதிகாலை 5.27 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சுங்கை பினாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்தாக அவர் சொன்னார்.
பத்து நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்த போது பெரோடுவா கஞ்சில் கார் ஒன்று தீக்கிரையானதைக் தீயணைப்பு வீரர்கள் கண்டனர். 100 விழுக்காடு எரிந்த நிலையில் காணப்பட்ட அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் கருகிய நிலையில் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.