ஷா ஆலம், அக் 26 - சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்) மற்றும் சிலாங்கூர் இந்திய மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு இலாகா (ஐ-சீட்) ஆகிய திட்டங்கள் கடந்த 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். சிலாங்கூரின் வளர்ச்சிக்கு இணையாக மற்ற இனங்களுடன் இந்திய சமூகமும் மேம்பாடு காண்பதை உறுதி செய்யும் நோக்கில் 50 லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன் இவ்விரு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன. சித்தம் திட்டம் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேம்பாட்டுப் பயிற்சி, திறன்கள் மற்றும் உற்பத்திக்கான குறுகிய கால படிப்புகள், வழிகாட்டுதல் மற்றும் உபகரணங்களுக்கான உதவி ஆகியவையே அந்த நான்கு பிரிவுகளாகும். இந்த சித்தம் திட்டத்தின் வழி 2,000 க்கும் மேற்பட்ட சிறு வணிகர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஐ-சீட் திட்ட அமலாக்கம் மூலம் கடந்த ஆண்டு முதல் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தின் வாயிலாக 600க்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்கள் வர்த்தகத்திற்கு தேவையான உபகரணங்களைப் பெற்று பயனடைந்துள்ளனர். இந்த அபரிமித ஆதரவு மாநில அரசுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதோடு இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டை மேலும் 500,000 வெள்ளி அதிகரித்து 15 லட்சம் வெள்ளியாக ஆக்கியுள்ளது.