ECONOMYNATIONALSUKANKINI

மலேசிய கிண்ணம்- சிலாங்கூர் 2-0 கோல் கணக்கில் கிளந்தானை தோற்கடித்தது

ஷா ஆலம், அக் 27- கோத்தா பாரு, சுல்தான் முகமது IV அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு மலேசியக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சிலாங்கூர் எஃப்.சி. அணி கிளந்தான் யுனைடெட் குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

எதிரணியின் சொந்த அரங்கில் முதல் ஆட்டத்தை தொடக்கிய சிலாங்கூர் அணி தனது முதலாவது கோலை இறக்குமதி ஆட்டக்காரர் ஹெர்லிசன் கெய்யோன் மூலம்  37வது நிமிடத்தில் போட்டது.

முதல் பாதி ஆட்டம் முடியும் வரை கோல் எண்ணிக்கை 1-0 என்ற நிலையிலே இருந்தது. பயிற்றுநர் டான் செங் ஹோ  தலைமையிலான இக்குழு மறுபாதி ஆட்டத்தில் வேகத்தை அதிகப்படுத்தி கோல் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் ஹெர்லிசன் மூலம் மேலும் ஒரு கோலை புகுத்தி கோல் எண்ணிக்கையை 2-0 ஆக ஆக்கியது.

பெனால்டி மூலம் மூன்றாவது கோலை பெறுவதற்குரிய அரிய வாய்ப்பு சிலாங்கூர் அணிக்கு ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் கிடைத்தது. எனினும், அந்த வாய்ப்பை அது நழுவ விட்டது.

இவ்விரு குழுக்களும் வரும் நவம்பர் 1ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, எம்.பி.பி.ஜே. அரங்கில்  மீண்டும் சந்திக்கவுள்ளன.


Pengarang :