கோத்தா பாரு, அக் 28– வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள பேரிடரை எதிர்கொள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70,000 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
அந்த மீட்புப் பணியாளர்களில் 21,018 போலீஸ் துறையையும் 19,500 பேர் மலேசிய ஆயுதப் படையையும் 15,000 பேர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையையும் 10,500 பேர் பொது தற்காப்பு படையையும் 4,400 பேர் மக்கள் தன்னார்வலர் அமைப்பையும் சேர்ந்தவர்களாவர் என்று அவர் சொன்னார்.
அதிகமான போலீஸ் படை உறுப்பினர்கள் 15வது பொதுத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பர் என்பதால் இதர துறைகளின் உதவியை தாங்கள் நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதர துறைகளிடமிருந்து லோரிகள், படகுகள், நீர் சார்ந்த சாதனங்களை நாங்கள் கேட்டுள்ளோம் என்று கிளந்தான் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான தயார் நிலை தொடர்பான விளக்கமளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
நாட்டில் வெள்ள அபாயம் மிகுந்த 5,500 இடங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். வெள்ளம் காரணமாக ஏற்படக்கூடிய பேரிடரை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயார் நிலையில் உள்ளதால் மக்கள் காவல் துறை மீது நம்பிக்கை வைப்பதற்கான சில வியூகங்களை நாங்கள் வகுத்துள்ளோம் என்றார் அவர்.