சிப்பாங், அக் 30- சிப்பாங் மாவட்டம் அடைந்து வரும் துரித பொருளாதார வளர்ச்சி மாநிலத்தின் வருமானம் 218 கோடி வெள்ளியாக உயர்வு காண்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த வியக்கத்தக்க அடைவுநிலை காரணமாக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வருடாந்திர வருமான இலக்கான 205 கோடி வெள்ளியை இரண்டு மாதங்களுக்கு முன்பாவே அடைய முடிந்தது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
எப்போதும் இல்லாத அளவிற்கு கூடுதல் வருமானத்தை மாநிலம் ஈட்டுவதற்கு உதவி புரிந்த அரசு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் 205 கோடி வெள்ளி வருமானத்தை இலக்காக நிர்ணயித்திருந்தோம். எனினும், இப்போதே 2018 கோடி வெள்ளியை எட்டி விட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
சிப்பாங் மாவட்டத்தில் கிடைத்த வருமானம் மிகப்பெரியது. இங்குள்ள சிறந்த அடிப்படை வசதிகள் காரணமாக நிர்ணயிக்கப்பட்டதை விட 800 விழுக்காடு வருமானத்தை பதிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
இன்று இங்கு நடைபெற்ற சிப்பாங் மாவட்ட நிலையிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ள பேரிடருக்கும், கோவிட்-19 பெருந்தொற்றுக்கும் பிந்தைய பொருளாதார மீட்சி நடவடிக்கைகளும் மாநிலத்தின் வருமானம் அதிகரிப்பதற்கு உதவின என்றும் அவர் சொன்னார்.
அதாவது, மேம்பாட்டாளர்களும் முதலீட்டாளர்களும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு உதவ முன்வந்தனர். பெருந்தொற்று மற்றும் பேரிடர் சமயத்தில் அவர்கள் செலவுகளை நிறுத்தி வைத்த காரணத்தால் பிரிமியம் மற்றும் நில வரி வசூலிப்பு தடைப்பட்டது என்று அவர் விளக்கினார்.
பொருளாதாரம் மீண்டும் திறக்கப்ப ட்டப் பின்னர் மேம்பாட்டு நடவடிக்கைகளை நாம் ஊக்குவித்தோம். முதலீட்டு நடவடிக்கைகளும் சீராக நடைபெற்றன. மக்கள் மத்தியில் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் சுறுசுறுப்படைவதற்கு இது மறைமுகமாக உதவியது என்றார் அவர்.