கோம்பாக், நவ 2- டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் தன்னடக்கமும் பிரச்னைகளை எளிதில் தீர்க்கும் வல்லமையும் கோம்பாக் மக்கள் அவரை ஆதரிப்பதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதிலிருந்து அவர் அடிக்கடி களத்தில் இறங்கி பணியாற்றி வருவதாக சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.ரஹிம் காஸ்டி கூறினார்.
வெள்ளப் பிரச்னையை உதாரணமாகக் கூறலாம். அந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக ஆறு மற்றும் கால்வாய்களை விரிவாக்கம் செய்யும் பணிக்கு அமிருடின் உத்தரவிட்டார். 80 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ள இப்பணியின் மூலம் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அவர் சொன்னார்.
அதோடு மட்டுமின்றி மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதற்கும் மந்திரி புசார் உத்தரவிட்டார் என நேற்று இங்கு நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் அமிருடினுக்கு ஆதரவளிப்பாளர்கள் என பெரிதும் எதிர்பார்க்கிறேன். அதே போல் உலு கிளாங் மற்றும் கோம்பாக் செத்தியா தொகுதி மக்களின் ஆதரவும் அவருக்கு கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என ரஹிம் சொன்னார்.
இப்பொதுத் தேர்தலில் கோம்பாக் தொகுதியில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை எதிர்த்து சிலாங்கூர் மந்திரி புசாரான அமிருடின் ஷாரி போட்டியிடுகிறார். ஷெராட்டான் நகர்வு மூலம் பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியைக் கவிழ்த்த கபடதாரி அஸ்மின் என்பது குறிப்பிடத்தக்கது.