ஈப்போ, நவ 18- மூன்று டிரெய்லர்கள் உள்பட ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தின் 382.3வது கிலோமீட்டரில் சிலிம்ரிவருக்கு அருகில் இன்று விடியற்காலை நிகழ்ந்தது.
இந்த விபத்து குறித்து இன்று விடியற்காலை 1.00 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார்.
சிலிம் ரிவர் தீயணைப்பு நிலையத்திலிருந்து குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு இரும்பு ஏற்றிய மூன்று டிரெய்லர்கள், நிசான் எக்ஸ்-டிரேய்ல் மற்றும் புரோட்டோன் இரிஸ் ஆகிய வாகனங்களை உள்ளடக்கிய விபத்து நிகழ்ந்துள்ளதை அக்குழுவினர் கண்டனர்.
இவ்விபத்தில் டிரெய்லர் ஓட்டுநர் ஒருவர் லோரியின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டிருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அவ்வாடவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர் என்று அப்பேச்சாளர் சொன்னார்.
உயிரிழந்த ஆடவரின் உடல் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஆடவர் குறித்த விபரங்கள் இன்னும் தெரியவில்லை எனக் கூறிய அவர், சவப்பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்றார்.
இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலையின் அனைத்து தடங்களும் மூடப்பட்டதால் நான்கு கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பிளஸ் நிறுவனம் தெரிவித்தது.