ஷா ஆலம், நவ 22- பெர்மாத்தாங் தொகுதியில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 300 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் தலா 100 வெள்ளி உதவித் தொகையைப் பெறுகின்றனர்.
இத்திட்டத்திற்காக சிலாங்கூர் மந்திரி பெசார் கட்டமைப்பு (எம்.பி.ஐ) 30,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வரும் ஜனவரி முதல் கட்டங் கட்டமாக நிதி பகிர்ந்தளிக்கப்படும். தகுதியுள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக விண்ணப்ப பாரங்களை ஆழ்ந்து பரிசீலிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இந்த உதவி தவிர்த்து சட்ட மன்ற சேவை அலுவலகமும் பள்ளி செல்லும் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளி உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதல் வசதி குறைந்த தரப்பினருக்கு உதவுதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்களை எம்.பி.ஐ இம்மாதம் திறந்துள்ளது.
இந்த உதவித் திட்டத்தில் பங்கேற்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பு 2,500 வெள்ளியிலிருந்து 4,000 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.