ECONOMYNATIONAL

அனைத்துக் கட்சிகளின் கருத்தும் பெறப்பட்டப் பின் அமைச்சரவை விரைந்து அமைக்கப்படும்- அன்வார்

பெட்டாலிங் ஜெயா, நவ 29- அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் கருத்தும் பெறப்பட்டப் பின் ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை விரைந்து அமைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் அமைச்சரவையின் அளவு குறைக்கப்படும் என்பதால் அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.

நான் ஏற்கனவே கூறியது போல், வழக்கத்தைக் காட்டிலும் இம்முறை எட்டு கட்சிகளை இந்த ஒற்றுமை அரசாங்கம் உள்ளடக்கியுள்ளது. முன்பு அமைச்சரவையில் 50 முதல் 60 உறுப்பினர்கள் வரை சேர்க்கப்பட்டனர். அதுவும் போதவில்லை என்றால் சிறப்புத் தூதர்கள், ஆலோசகர்கள் என மேலும் பலரும் இணைக்கப்பட்டனர். ஆனால், நான் அவ்வாறு செய்யத் தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள பிகேஆர் தலைமையகத்தில் பக்கத்தான் ஹராப்பான் தலைவர் மன்றக் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ  ஜாஹிட் ஹமிடியும் அமைச்சரவையில் இடம் பெறுவார் என கூறப்படுவது குறித்து கேட்கப்பட்ட போது, இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் கருத்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என அவர் சொன்னார்.

எனினும், சட்ட ரீதியாக நமக்கு தெரிந்தது என்னவென்றால் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகுதான் ஒருவர் குற்றவாளி என கருதப்படுவார். மற்றவர்களை (குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படாதவர்கள்) நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

நாட்டின் பத்தாவது பிரதமராக அன்வார் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இந்த கூட்டத்தில் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்  பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி, ஜசெக தலைமைச் செயலாளர்  அந்தோணி லோக், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, மூடா கட்சித் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், அப்கோ கட்சியின் பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :