ஷா ஆலம், டிச 2– வர்த்தகம் புரிவோருக்கு கடனுதவி வழங்கும் அமைப்பான யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் கடந்த 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 55,834 தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கி உதவியுள்ளது.
வர்த்தகத்தை தொடங்குவது மற்றும் விரிவாக்கம் செய்வது ஆகிய நோக்கங்களுக்காக அவர்களுக்கு இதுவரை 71 கோடி வெள்ளி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
ஐ-பிஸ்னஸ், ஸீரோ டு ஹீரோ, ஐ-லெஸ்தாரி, கோ டிஜிட்டல், நியாகா டாருள் ஏசான் (நாடி) ஆகிய நான்கு கடனுதவித் திட்டங்களுடன் ஹிஜ்ரா தொடங்கப்பட்டது. தற்போது ஐ.லெஸ்தாரி, ஐ-பெர்மூசிம், ஐ-அக்ரோ ஆகிய புதிய கடனுதவித் திட்டங்களுடன் அது விரிவாக்கம் கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மீதான விவாத த்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அடுத்தாண்டில் ஐ-சோசியல் உள்பட மேலும் பல புதிய கடனுதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறிய அவர், வெ.1,000 முதல் வெ.10,000 வரை கடனுதவி வழங்க வகை செய்யும் இத்திட்டத்திற்கு தொடக்க நிதியாக 42 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.