புத்ராஜெயா, டிச 3- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதி இலாகாவை வைத்திருப்பதில் விருப்பமில்லாமல் இருப்பதாகவும், ஆனால் பொருளாதாரம் மற்றும் வணிக சமூகம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் அணுகுமுறையைக் செயல்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
“இதன் ஆரம்பமாகவே தான் நிதி அமைச்சராக தொடர நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார், அமைச்சில் தனது கடமைகளுக்குக் கருவூலச் செயலாளர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள் அடங்கிய ஒரு வல்லமைமிக்க குழு உதவும் எனக் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சகம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பெட்ரோனாஸ் ஆலோசகர் டான்ஸ்ரீ முகமட் ஹாசன் மரிக்கன் தலைமையிலான பல ஆலோசகர்கள் உதவுவார்கள், அவர்கள் அனைவரும் ஊதியம் இல்லாமல் அக்குழுவில் இருப்பார்கள் என்று அன்வார் கூறினார்.
ஐக்கிய அரசாங்கத்தின் அமைச்சரவை அறிவிக்கும் சந்திப்பில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். நவம்பர் 25 அன்று, அன்வார் நிதி இலாகாவை வைத்திருப்பது பற்றி பரிசீலிக்கப் போவதில்லை என்று கூறியதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் அது பற்றிய இறுதி முடிவை எடுப்பதற்கு முன் அனைத்து சாத்தியக்கூறுகள் சீர்தூக்கி பார்க்கப்படும் என்றார்.
சிறிய அமைச்சரவையை கொண்டிருப்பதன் மூலம் சேமிக்கப்படும் பணம் குறித்த கேள்விக்கு, வீண் விரயத்தை தவிர்த்து, தேவையற்ற செலவுகளை குறைத்தால் சேமிக்க முடியும் என்றும், இந்த அணுகுமுறை பிரதமர் அலுவலகத்தால் தொடங்கப்படும் என்றும் கூறினார்.
– பெர்னாமா