ஷா ஆலம், டிச 16- கோதோங் ஜெயா, இயற்கை விவசாயப் பண்ணை அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இருவரை ஆடவர் ஒருவர் தன் கைளால் மண்ணைத் தோண்டி இருவரை காப்பாற்றினார்.
அந்த நிலச்சரிவில் இருந்து தப்பி பாதுகாப்பான இடம் நோக்கி ஓடிக் கொண்டிருந்த போது யாரோ உதவிக் கோரி கூச்சலிடும் சத்தம் கேட்டு அங்கு விரைந்தாக சோங் (வயது 28) என்ற ஆடவர் கூறினார்.
நிலச்சரிவு ஏற்பட்டவுடன் நான் கூடாரத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினேன். அப்போது உதவி கோரி யாரோ கூச்சலிடவே அத்திசை நோக்கி விரைந்தேன். அங்கு இடுப்பு வரை மண்ணில் புதையுண்ட நிலையில் பெண்மணி ஒருவர் காணப்பட்டார்.
நான் உடனடியாக கைளால் மண்ணைத் தோண்டி அவரை காப்பாற்றினேன். அதனைத் தொடர்ந்து மற்றொரு பெண்ணையும் இடிபாடுகளிலிருந்து மீட்டேன். அவ்விருவரையும் காப்பாற்ற 10 முதல் 25 நிமிடங்கள் வரை பிடித்தது என்று அவர் சொன்னார்.
இந்த நிலச்சரிவில் இதுவரை எண்மர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.