கோலாலம்பூர், டிச 18- நாடு முழுவதும் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த திறன் பெற்ற 69,754 உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய பொது தற்காப்புப் படை, மலேசிய தன்னார்வலர்த் துறை (ரேலா), மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவற்றின் உறுப்பினர்களும் அவர்களில் அடங்குவர்.
இது தவிர, வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படக்கூடிய வெள்ளத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக 19 லட்சம் பேர் தங்கும் வசதி கொண்ட 7,906 வெள்ள துயர் துடைப்பு மையங்களும் தயார் படுத்தப்பட்டுள்ளதாக சபா, சரவா மற்றும் சிறப்பு விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமது அலி கூறினார்.
நாட்டில் குறிப்பாக கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங்கில் பருவ மழை நேற்று காலை முதல் தொடங்கி விட்டதை தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகள் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக கிழக்கு கரை மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் விளக்கமளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சீரான செயலாக்க நடைமுறை (எஸ்.ஒ.பி.) புதுப்பிக்கப் பட்டதன் மூலம் இவ்வாண்டில் வெள்ள மேலாண்மை அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பேரிடர் தயார் நிலை பயிற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதோடு கிராமத் தலைவர்கள், இளைஞர்கள், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட வட்டார சமூகத்திற்கும் வெள்ளம் தொடர்பில் விளக்கமளிக்கப் பட்டுள்ளது என்றார் அவர்.